Friday, May 21, 2010

காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.

காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது, "தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி" என்றாள்.

"என்ன நடந்தது" என விசாரித்தேன். "வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று" என்றாள்.

"காது கடித்தால் என்ன செய்வீர்கள்?" வினவினேன். "நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை" என்றான் கூட வந்த மகன்.

காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான். நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது. காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது.
உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும். இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள் காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை. காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை. காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள்.

பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும்.
இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

காது குடையலாமா?

ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான் எப்போது பார்த்தாலும் காதுக்குள் ஏதோ ‘குறுகுறு’வென்று இருந்து கொண்டே இருக்கிறது.

அந்தச் சூழலில் எதையாவது எடுத்துக் குடையலாமா? குத்திக் கொள்ளலாமா? என்கிற அளவுக்கு அரிப்பும், வலியும் தாங்க முடியவில்லை.நானும் தினம் ‘பட்ஸ்’ எல்லாம் போட்டு க்ளீன் பண்ணிப் பார்த்து விட்டேன். ஆனாலும், என் காதுப் பிரச்னை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

நான் என்ன செய்வது டாக்டர்? ஏன் அப்படி ஆகிறது

டாக்டர் ரவி ராமலிங்கம் (காது, மூக்கு, தொண்டை நிபுணர்)

‘‘நீங்கள் உங்கள் பிரச்னைக்குக் காரணம். இதுவரை காதுக்குள் விட்டுக் குடைந்த ‘பட்ஸ்’தான் உங்களின் எதிரி. என்ன ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதா?

உங்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான். உங்களுக்கு ஏற்பட்டிருப்பது ‘ஒடிடிஸ்எக்ஸ்டெர்னா’ எனப்படும் காது சம்பந்தப்பட்ட நோய் இது வருவதற்குக் காரணமே காதுக்குள் விரல், சாவி, குச்சியை விட்டு நோண்டுவது, ஊக்கை விட்டு குடாய்வது, இறகை உள்ளே விட்டுக் குடைந்து சுகம் காண்பது. அது மட்டுமில்லாமல் காதை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ‘பட்ஸ்’ஸை உள்ளே விட்டுக் குடைவது ஆகியக் காரணங்களால்தான் இந்நோய் ஏற்படுகிறது. அதுவும் உலக அளவில் இந்தியாதான் இந்நோயில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறதாம். செவிப்பாதையின் மெல்லிய தோலில் வலி, வீக்கம், சிராய்ப்பு என்று சிறிய புண்களோடு ஆரம்பிக்கும் இந்நோய் முற்றும்போது காது கேட்கும் திறனையே நிறுத்தி விடும். அதோடு, நீச்சல் அடிக்கும்போது தண்ணீர் காதுக்குள் புகுந்திட இன்பெக்ஷன் ஏற்படக்கூடும். இதற்கு ‘ஸ்விம்மர்ஸ் இயர்’ என்று பெயர். காதைப் பொறுத்தவரையில் எந்த கிரிமியும் உள்ளே புகாது. அதற்கு பாதுகாக்கத்தான் (கீணீஜ்) வாக்ஸ் எனப்படும் மெழுகு போன்ற திரவம் இருக்கும். காதுக்குள் நுழையும் ஒலிக் காற்று என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு செவிப்பாதையில் பாதுகாவலனாக விளங்குகிறது. காதினுள் புகும் நீர், தூசு போன்றவைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு வெளியேற்றும் தன்மை கொண்டது. அதைப் பலர் ‘அழுக்கு’ என்று நினைத்து ‘பட்ஸை’க் கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றனர். இதனால் காதுப் பிரச்னைகள் இன்னும் அதிகரிக்கிறது. எனவே காதுக்குள் எதையும் விட்டுக் குடையாமல் இருந்தாலே பிரச்னை வராது. பிரச்னையின் ஆரம்பக்கட்டத்திலேயே சொட்டு மருந்து, ஆயின்மெண்ட் எனக்குணப்படுத்திவிடலாம். ஆனால், அப்படியே விட்டு விட்டால் செவிப்பறையில் ஓட்டை விழுந்து காது கேட்காமல் போய் விடும். சர்க்கரை வியாதி இருக்கிறவர்களுக்கு பெரும்பாலும் இப்பிரச்னை வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நன்றி தமிழ் குடும்பம்

மேலும் பல தகவலுக்கு இங்கு சுட்டவும்

No comments: