Wednesday, March 15, 2006

வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ரயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே

ஈனப் பறையர்க ளேனும் - அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத்த ராய்விடு வாரோ? - பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்

அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்

யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்


முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி


-பாரதியார்

No comments: