Thursday, August 12, 2010

ஏ.டி.எம் இயந்திரம் உருவான வரலாறு !

இன்று பெட்டிக்கடைகளைப்போல் உலகெங்கும் இருக்கிற மொத்த ATM களின் எண்ணிக்கை 17 லட்சத்திற்கும் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பணம் எடுக்க என்று மட்டும் இல்லாமல் ஏராளமான் வங்கி சேவைகளையும்,ரயில்வே டிக்கெட், சினிமா,மற்றும் பில் கட்டணங்கள், உள்பட பல வசதிகளையும் ஏ.டி.எம். வழங்குகிறது.

காரிலிருந்து இறங்காமலேயே பணம் எடுக்கும் வசதியுள்ள " டிரைவ் இன் ஏ.டி.எம்," வேனில் வீடு தேடிவரும் "மொபைல் ஏ.டி.எம்" கேரளாவில் " படகு ஏ .டி.எம் " என ஏ.டி.எம் பல வகையிலும் நம் வாழ்க்கையோடு பிண்ணிப்பிணைந்த ஒன்றாகிவிட்டது.

இப்படி பல புதுமைகளைக்கொண்ட இந்த ஏ.டி.எம். உருவாக பிள்ளையார் சுழிப் போட்டவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த " ஜான் ஷெப்பர்ட் பாரன்".இந்த ஏ.டி.எம் இயந்திரங்கள் உருவான கதை சுவராஸ்யமானது.ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன்.

வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.குளித்துகொண்டிருந்த பாரனுக்கு,இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் போனதைப் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம்.

1967-ம் ஆண்டு ஜூன் 27 அன்று வடக்கு லண்டனில் "பார்கிளேஸ் வங்கியில்" பாரன் உருவாக்கிய ஏடிஎம் முதல் முதலில் நிறுவப்பட்டது. ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,ஆறு இலக்கம் கொண்ட " பின் " எண்ணையும் கொண்டு அதில் பணம் பெற முடிந்தது.

ஆறு இலக்கம் கொண்ட " பின் " நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை 4 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றி தாருங்கள் என்று மனைவி " கரோலின் " கூறியதை ஏற்று,ஆறு இலக்கம் கொண்ட " பின் " நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன்.

பாரானின் மற்றுமொரு கண்டுப்பிடிப்பு : மீன்களைத் தின்னும் சீல்களை அச்சுறுத்தும்படி திமிங்கல ஒலி எழுப்பும் மீன் பண்ணைகளுக்கான கருவி.
இத்தனைக்கும் சொந்தக்காரரான " ஷெப்பர்ட் பாரன் " இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது இன்னுமொரு சிறப்பு.